சாக்கடைக் குழியில் பதுங்கிய கடாபி, கெஞ்சியும் புரட்சிப் படையினரால் சித்ரவதை செய்யப்பட்டு சுட்டுக் கொல்லபட்டார் ?
புரட்சிப் படையினரிடம் சிக்காமல் தப்பிப்பதற்காக தனது பாதுகாவலர்களுடன் பாதாள சாக்கடைக் குழிக்குள் பதுங்கினார் கடாபி. அவரைக் காப்பாற்றும் நோக்கில் அவரது பாதுகாவலர்கள் கடாபி உள்ளே இருப்பதாக கூறினார்.
இதையடுத்து உள்ளே இறங்கி கடாபியை வெளியே கொண்டு வந்த புரட்சிப் படையினர் கடாபியை சரமாரியாக அடித்து உதைத்து பின்னர் சரமாரியாக சுட்டுக் கொன்றனர்.
தனது உடலில் ஏற்பட்ட காயத்தால் கடும் அவதிப்பட்ட கடாபி, சுடாதீங்க, சுடாதீங்க என்று கெஞ்சியுள்ளார். ஆனால் புரட்சிப் படையினர் கடாபியை சுட்டுக் கொன்று விட்டனர்.
உலக அளவில் முக்கியமான சர்வாதிகாரிகளில் கடாபிக்கும் இடமுண்டு. லிபியாவை தனது சர்வாதிகாரப் பிடியில் வைத்திருந்த கடாபி, சர்வாதிகாரம், எதேச்சதிகாரம் ஆகியவற்றை மட்டுமே நம்பினார். மக்களின் நம்பிக்கை, அன்பைப் பெற அவர் தவறி விட்டார். இதனால்தான் தனது சொந்த மக்களாலேயே ஓடஓட விரட்டப்பட்டு கடைசியில் சாக்கடைக் குழியில் பதுங்க வேண்டிய நிலைக்கு அவர் போய் விட்டார்.
கடாபி ஆட்சி போய் புரட்சிப் படையினர் வசம் லிபியாவின் பெரும்பாலான பகுதிகள் வந்த நிலையில் அவரது சொந்த ஊரான ஷிர்தே நகர் மட்டும் பிடிபடாமல் இருந்தது. அதையும் சமீபத்தில் பிடித்தனர் புரட்சிப் படையினர். இதையடுத்து அங்கு நேட்டோ படையினர் உதவியுடன் புரட்சிப் படையினர் ஷிர்தேவை சல்லடை போட்டுத் தேடினர்.
அப்போது புரட்சிப் படையினருடன் அரசுப் படையினர் ஒரு இடத்தில் கடும்துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். அப்போது சிலர் வேகமாக பாதாள சாக்கடைக் குழிக்குள் இறங்கி பதுங்கினர்.
இதைப் பார்த்த புரட்சிப் படையினர் அவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். அப்போது பாதுகாப்புப் படை வீரர் வெளியே வந்து சுடாதீர்கள், உள்ளே கடாபி இருக்கிறார். அவர் காயமடைந்திருக்கிறார் என்று கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த புரட்சிப் படையினர் வேகமாக வந்தனர். உள்ளே பார்த்தபோது கடாபி காயமடைந்த நிலையில் இருப்பது தெரிந்தது.
இதையடுத்து கடாபியை வெளியே கொண்டு வந்தனர் புரட்சிப் படையினர். அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்தும், சரமாரியாக அடித்தும் இழுத்து வந்து கீழே போட்டனர். அப்போது என்னை சுட்டு விடாதீர்கள் என்று கெஞ்சியுள்ளார் கடாபி. ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் புரட்சிப் படையினர் கடாபியை சுட்டுக் கொன்று விட்டனர்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் உள்ள காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
1969ம் ஆண்டு ராணுவப் புரட்சி மூலம் லிபியாவைப் பிடித்தார் கடாபி. அன்று முதல் லிபியாவை அவர் ஆட்டிப் படைத்து வந்தார். தனக்கு எந்த ரூபத்திலும் எதிர்ப்பு வராமல் பார்த்துக் கொண்டார். அமெரிக்காவைப் பகைத்துக் கொண்டார். சர்வாதிகாரமாக நடந்த இவர் நாட்டு மக்களின் அன்பையும், நம்பிக்கையையும் பெறத் தவறினார். தனதுசொந்த மக்களையே அவர் துன்புறுத்த ஆரம்பித்தார். அதுவே அவருக்கு எதிராக இப்போது விஸ்வரூபம் எடுக்கக் காரணமாக அமைந்து விட்டது.
அரபு நாடுகளில் ஏற்பட்ட கிளர்ச்சியும், வடக்கு ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட புரட்சிகளும் லிபியாவுக்கும் பரவி இப்போது கடாபியின் மரணத்துடன் வந்து முடிந்துள்ளன. கடாபி வசம் கடந்த 42 ஆண்டுகளாக இருந்து வந்த லிபியாவை மீட்டுள்ள புரட்சிப் படையினர் அதை எப்படி சீரமைக்கப் போகிறார்கள் என்ற பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கொல்லப்பட்ட கடாபிக்கு 2 மனைவிகள். ஒருவர் 1970ம் ஆண்டிலேயே இறந்து விட்டார். இரு மனைவியர் மூலம் அவருக்கு மொத்தம் 7 பிள்ளைகள். அதில் இரண்டு மகன்கள் இறந்து விட்டனர்



